ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

இரங்கலும் இரங்கல் நிமித்தமும்…



இரங்கலும் இரங்கல் நிமித்தமும்…
கூவங்களைத் தனதாக்கி
அழுதலை அலையாக்கிச்
செத்தமீன்களோடும்
புலவு நாற்றமெடுத்த நெய்தல் பரப்போடும்
கரையிடம் கண்ணீர்க் கடிதம் தர
முயல்கிறது அலைகடல்

மதுபானப்புட்டிகளின் மலைப்பில்
வெள்ளைக் கண்ணீர்த்தாரைகளைக்
கொட்டியபடி
குற்றால அருவிகளும் அகத்தியர் அருவிகளும்
சாயப் பட்டறைகளின்
மாய நிறங்களைத் தனதாக்கி
நாளொரு வர்ணமாகப்
பொழுதொரு நச்சாக
ஓடிக்கொண்டேயிருக்கின்றன
தமிழகத்து வண்ண நதிகள்.

அணுக்கதிர் வீச்சுக்கு
ஆளாகி அழிகின்றன
உலக நாடுகள்.
இழந்த நிமிடங்களின்
இறந்தகாலப் புதல்வர்களாக
இரங்கல் கவிதை
இயற்றிக் கொண்டிருப்பதைத் தவிர
இப்போது நம்மால்
என்ன செய்ய முடியும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக