ஞாயிறு, 2 மார்ச், 2014

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி ஆசிரியர் மன்றம் மூணார் குடும்பச் சுற்றுலா



மூணார்
தேநீர் மலையாய் காட்சியளித்தது மூணார் எனும் பச்சைமாமலை.

.கொல்லத்திலிருந்து நான்குமணி நேரப்பயணம்.

எப்போதும் பாடம்,ஆய்வகம்,நூலகம் என்றிருக்கும் சக ஆசிரியர்கள் அந்த மலைக் காலக் காலைப்பொழுதில் சிறுகுழந்தைகளாக மாறியிருந்தனர்.

அடிமாலியிலிருந்து எங்கள் பேருந்து நாணிக்கோணியபடி மூணார் நோக்கி மேலெழும்பி ஊர்ந்தது.

ஆசிரியர் மன்றத்தின் சார்பில் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


இயற்கையின் மடியில் குழந்தைகளாய் இருந்தோம்.

எங்குநோக்கினும் பச்சைப்பசேல் என்று தேயிலைத் தோட்டம்.மாசுமருவற்ற உயிர்வாயு நுரையீரலைக் குளிரவைத்தது.

ஆங்காங்கே மலைத்தாயின் தனப்பாலாய் குட்டிகுட்டிஅருவிகள்.

மலைநடுவே மூணார்ஊர் குட்டியாய் தெரிந்தது.

மூணார் தேவிகுளத்தில் மலைஉச்சியில் அருமையான அறையில் நின்று தூரத்தில் தெரிந்த மலைமுகட்டையும் ஏரியையும் ரசித்தது மறக்கமுடியா நினைவு.


மூணார் அணைக்குச் செல்லும்வழியில் மலர்க்கூடம் மனதை மயக்கியது.

விதவிதமான மலர்கள் கண்ணைப் பறித்தன.

அன்னாசிப்பழம் வாசல் கடையில் தித்தித்தது.

மயிலறகு அருமையான விசிறியாய் ஆங்காங்கே கிடைத்தது.

இயற்கையின் இறக்கையில் பறக்கயில் வாழ்வுவானம் வசந்தவானமாகத்தான் தெரிகிறது.


மேலே பயணித்தோம்.மாட்டுப்பட்டி அணை பரந்துவிரிந்து எங்களை வரவேற்றது.மதகுகளில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்தது.

அணைத் தளையை உடைத்து சுதந்திரமண் நோக்கிப் பாயும் உற்சாகம் அதன் பாய்தலில் தெரிந்தது.வாழ்வின் மறக்க முடியாத் தருணங்களில் நம் குடும்பம் கூட இருக்கிறது.

மனைவி,குழந்தைகள்,சகஆசிரிய நண்பர்கள்,அவர்களின் குடும்பம் என ஒரே பேருந்தில் பயணித்து நூறுகண்களால் ஆயிரம் காட்சிகளைக் காண்பது எப்போதாவதுதான் வாய்க்கும் அந்த வாய்ப்பு சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி ஆசிரியர் மன்றக்குடும்பத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளாய் இறைவன் இனிதே வழங்கியிருக்கிறான்.















கண்ணன்தேவன் தேயிலைக் கடையில் விதவிதமான தேயிலைகளையும் கண்டமகிழ்வோடு ஆலப்புழா பயணமானோம்.

சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக